சீனா சொந்தமாக அமைத்து வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஷென்சோ -12 விண்கலம் மூலமாக 3 விண்வெளி வீரர்கள் இன்று வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வடமேற்கு சீனாவின் கோபி பாலைவனத்தில் உள்ள ஜுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து பீஜிங் நேரப்படி காலை 9:22 மணிக்கு இந்த விண்கலம் ஏவப்பட்டதாக சீன விண்வெளி நிறுவனம் (CMSA) தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது.
இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சீன விண்வெளி வீரர்கள் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனை அடுத்து சீனா தற்போது தனியாக விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.
தியாஹே என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்திற்கான மைய பகுதியை கடந்த ஏப்ரல் 29-ஆம் திகதியன்று சீனா விண்ணில் செலுத்தி இருந்தது.
இதன் தொடர்ச்சியாக ஒரு மாதம் கழித்து மே 29-ஆம் திகதியன்று விண்வெளி நிலையத்திற்கான எரிபொருள், விண்வெளி உடைகள், உணவு பொருட்களுடன் தியான்ஜோ -2 என்ற விண்கலத்தை சீனா விண்ணுக்கு அனுப்பியது.
இந்த நிலையில் ஷென்ஜோ -12 என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மைய கட்டுமானப் பணிக்காக பயிற்றப்பட்ட 3 வீரர்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக விண்வெளி வீரர்கள் அனைவரும் பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். கூடி இருந்த பொதுமக்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அங்கு குழுமியிருந்த சிறுவர்கள் விண்வெளி வீரர்களிடம் கற்றுக்கொள்கிறோம் என சீன மொழியில் முழங்கினர்.
இதனையடுத்து ஷென்ஜோ -12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களையும் தாங்கி விண்ணிற்கு செலுத்தப்பட்டது. விண்வெளி மையத்திற்கு செல்லும் மூவரும் சுமார் 3 மாதங்கள் சீன விண்வெளி நிலையத்தில் தங்கி இருப்பர். இந்த நடவடிக்கை விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல் என சீனா தெரிவித்துள்ளது.